செய்திகள்

தாராபுரத்தில் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி

தாராபுரத்தில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாராபுரம்:

தாராபுரம் தொண்டாமுத்தூர் திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் குமரன் (வயது 48). இவர் நேற்று தேர்பாதை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது எதிரே அதேபகுதியில் உள்ள குள்ளாயிபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் (46) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

படுகாயம் அடைந்த குமரனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பல்லடம் செல்லும் வழியில் குமரனும் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.