செய்திகள்

தனுஷ்கோடியில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை

பருவ மழை தொடக்கம் எதிரொலியால் தனுஷ்கோடியில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடல் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை.

ராமேசுவரம்:

பருவ மழை தொடங்கியதையொட்டி ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

அதன்படி ராமநாதபுரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் நேற்று மாலை முதல் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

தனுஷ்கோடியில் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடல் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. நாட்டுப் படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. இன்று காலையும் அதே நிலைதான் நீடிக்கிறது.

பாம்பன் ரெயில் பாலத்தில் அலைகள் பல அடி தூரத்துக்கு எழும்பியதால் ரெயில் மெதுவாகவே இயக்கப்பட்டது.

SCROLL FOR NEXT