டாக்கா:
வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள உணவு விடுதியில் கடந்தாண்டு ஜூலை மாதம் வெளிநாட்டினரை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் இந்தியப்பெண் உள்ளிட்ட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய நியோ ஜமாத் உல் முஜாகிதீன் பங்ளாதேஷ் (ஜே.எம்.பி) என்ற தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலில் மூளையாக செயல்பட்டது கண்டறியப்பட்டது.
டாக்கா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டில் பல இடங்களில் இந்த தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். மேற்கண்ட தாக்குதல் தொடர்பாக 4 தீவிரவாதிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு மூளையாக செயல்பட்ட அஸ்லாம் ஹுசைன் ரஷீத் என்பவனை அந்நாட்டு தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நாதோர் என்ற பகுதியில் கைது செய்யப்பட்ட ரஷீத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.