செய்திகள்

திருப்பதியில் ஆதார் அட்டை இல்லாமல் வந்த பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருப்பு

திருப்பதியில் ஆதார் அட்டை இல்லாமல் வந்த பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் வெகுநேரம் காத்திருந்ததால் அதிகாரிகளை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

திருமலை:

திருப்பதி கோவிலில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்யும் வகையில் ஆதார் அட்டையுடன் வரும் பக்தர்களுக்கு ‘டைம்ஸ்லாட்’ டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இதற்காக சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை பதிவு செய்தால் அவர்களுக்கு எந்த நேரத்தில் தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்கான அனுமதி வழங்கப்படும்.

ஆனால் ஆதார் அட்டை இல்லாமல் வருபவர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இலவச தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்த நிலையில் நேற்று ‘டைம்ஸ்லாட்’ டோக்கன் பெற்ற பக்தர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்தபோது உடனுக்குடன் அனுப்பப்பட்டனர்.

அதே நேரத்தில் ஆதார் அட்டை இல்லாமல் வந்த பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் வெகுநேரம் காத்திருந்தனர். பொறுமை இழந்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு கோவில் அதிகாரி கோதண்டராமாராவ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை சமரசப்படுத்தினர்.

பின்னர் இலவச தரிசன கதவுகள் குறிப்பிட்ட நேரங்களில் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.