செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர் திடீர் மரணம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர் திடீரென இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாலை மலர்

திருவண்ணாமலை:

சிவனின் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்கு 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீஆதிஅருணாசலேஸ்வரர், அஷ்டலிங்க சன்னதிகளில் வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதன் காரணமாக திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர். இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நேற்று பக்தர்கள் வெள்ளத்தில் பஞ்ச மூர்த்திகளின் மகா தேரோட்டம் கோலாகலகமாக நடந்தது.

இந்த நிலையில், கிரிவலப்பாதை காஞ்சி ரோட்டில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் இன்று காலை திடீரென இறந்து கிடந்தார். அவர் வெள்ளை நிற சட்டை, வேட்டி அணிந்திருந்தார். இவர் யார்? எந்த ஊரை? சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

மகா தேரோட்டத்தை தரிசிக்க வந்த வெளியூர் பக்தராக இருக்காம் என்று சந்தேகிக்கப்படுகிறது. திருவண்ணாமலை தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, கடந்த 4-ந் தேதி காலையில் பவுர்ணமி கிரிவலம் சென்ற புதுக்கோட்டை பனங்குளம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 38) என்ற விவசாயி, கிரிவலப் பாதையிலேயே திடீரென சுருண்டு விழுந்து துடி துடித்து இறந்தார்.

அன்றைய நாளே கிரிவலம் செல்வதற்காக வந்த புதுவை லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த சிவ சூரியன் (48) என்ற தனியார் நிறுவன காவலாளியும், அண்ணா நுழைவு வாயில் அருகே தென்றல் நகரில் உள்ள டீக்கடை முன்பு திடீரென உயிரிழந்தார். தொடர் உயிரிழப்புகளால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.