பெங்களூரு:
மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 1994-96 காலகட்டத்தில் அம்மாநிலத்தின் 14-வது முதல் மந்திரியாகவும் 1-6-1996 முதல் 21-4-1997 வரை இந்தியாவின் 11-வது பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஹஸன் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக தற்போது பொறுப்பு வகித்துவரும் தேவேகவுடா, அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டி இடுவார் என யூகங்கள் நிலவி வந்தன.
இந்நிலையில், இன்று ஹஸன் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவேகவுடா (85), ‘சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பாராளுமன்றத்துக்கு செல்ல விரும்பவில்லை. இதுதொடர்பாக, என் தொகுதி வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கவுள்ளோம்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எனக்கு மாற்றாக எனது பேரன் பிரஜாபதி ஹஸன் தொகுதியில் போட்டியிடலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபைக்கு மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் தனது மகனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவரும், அம்மாநில முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமியை மீண்டும் முதல் மந்திரி பதவியில் அமர்த்தும் வகையில் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாகவும் தேவேகவுடா தெரிவித்தார். #tamilnews