தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங். இவர் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2002-ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பு வெளியானதும் பஞ்ச்குலா நீதிமன்றம் பகுதியில் திரண்டிருந்த குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் ஆதரவாளர்கள் வன்முறயில் குதித்தனர். அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அருகாமையில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலும் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இரு ரெயில் நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
டெல்லியிலும் கலவரம் வெடிக்காமல் இருக்க டெல்லி மற்றும் டெல்லியின் பிறபகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், மாலை ஐந்து மணியளவில் அரியானா - டெல்லி எல்லைப்பகுதியிலும் வன்முறை வெடித்தது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள லோனி சவுக் பகுதியில் ஜெகஜீவன் ராம் நினைவு மருத்துவமனை வழியாக வந்த பஸ்சை வழிமறித்த கும்பல் பயணிகளை விரட்டி அடித்துவிட்டு பஸ்சை தீயிட்டு எரித்தது. ஆனந்த் விஹார் ரெயில் நிலையம் அருகே காலியாக நின்ற ரேவா எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரு பெட்டிகள் எரிக்கப்பட்டது. இதேபோல் நந்த் நகரி பகுதியிலும் 2 பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன .