அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ள வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில், ஜோ பிடன் இருமாதங்களாக ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜோ பிடன் அறிவித்தார். டுவிட்டரில் இது குறித்து ஜோ பிடன் கூறுகையில், “ துணை அதிபர் பதவிக்கு வேட்பாளராக கமலா ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மிகச்சிறந்த மக்கள் சேவகர்களில் ஒருவர் கமலா ஹாரீஸ் “ என்று தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரீஸின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள் ஆவர். அவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். தாயார் இந்தியர் ஆவார். கலிபோர்னியா மாகாணத்தில் அட்டார்னி ஜெனராலாக தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண் கமலா ஹாரீஸ் தான் ஆவார். அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் தென் ஆசிய பாரம்பரியத்தை கொண்ட முதல் பெண் என்ற பெருமையையும் கமலா ஹாரீஸ் பெற்றுள்ளார்.
தற்போது அமெரிக்க துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பால் கமலா ஹாரிஸ் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். அவருக்கு திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.
அதே போல் அமெரிக்க துணை அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிசுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.