சிறுவன் சுர்ஜித் மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். நேரில் ஆய்வு செய்யும் காட்சி 
செய்திகள்

சிறுவன் சுர்ஜித் மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் துணை முதல்வர் நேரில் ஆய்வு

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தின் மீட்பு பணியை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டார்.

மாலை மலர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

அவனை மீட்கும் பணிகள் சுமார் 53 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. நேற்று காலையில் இருந்து ரிக் இயந்திரத்தின் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தொடங்கியது.

ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன.  ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. குழந்தையை மீட்க ரிக் இயந்திரத்தால் இதுவரை 35 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டுள்ளது.  மேலும் ராமநாதபுரத்திலிருந்து மற்றொரு ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது,  குழியில் பாறைகள் உள்ளதால் அவற்றை தோண்டுவதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது.  தொடர்ந்து 2வது ரிக் இயந்திரத்தில் ட்ரில் கருவிகள் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது, மேலும் தற்போது ஆழ்துளை கிணற்றில் சுமார் 88 அடி ஆழத்தில் குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதனிடையே சிறுவன் சுர்ஜித் மீட்புப்பணியை பார்வையிட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்தார்.  அவரிடம் நடைபெற்று வரும் மீட்பு பணி குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கி கூறினார்.  துணை முதல்வருடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வந்தார்.