செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்துவிட்டேன் - டென்மார்க்கின் பணக்காரர் கதறல்

இலங்கையில் ஈஸ்டர் விடுமுறையை கழிக்கலாம் என்று தன் குழந்தைகளுடன் கொழும்பு வந்த டென்மார்க் பணக்காரர் குண்டுவெடிப்பில் தன் 3 குழந்தைகளை இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #SriLankablasts

மாலை மலர்

டென்மார்க் நாட்டின் தொழிலதிபர் ஆன்ட்ரசன் ஹாவல்க் பாவல்சன் (வயது 46). இவருக்கு நான்கு குழந்தைகள்.

போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலின்படி டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர். பல்வேறு தொழில் நிறுவ னங்கள் உள்ளன. இவரின் சொத்து மதிப்பு சுமார் 50 ஆயிரம் கோடி.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கை நாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்து இருந்தார். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் ஆன்ட்ரசனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

இந்த தகவலை ஆண்ட்ரசனுக்கு சொந்தமான பாவன்சன்’ஸ் பே‌ஷன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். குடும்பத்தினர் தனிப்பட்ட சுதந்திரம் கருதி வேறு எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாது. அவர்களின் உணர்வுகளுக்கு ஊடகங்கள் மரியாதை கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தைகளின் பெயர் விவரம் அளிக்கப்படவில்லை.

‘இலங்கை ஓர் அழகான நாடு. இந்த ஈஸ்டர் விடுமுறையை அங்கு கழிக்கலாம்’ என்று தன் குழந்தைகளிடம் கூறி கொழும்புக்கு சுற்றுலா அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் குழந்தைகளை பறி கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க நிற்கிறார்.

இங்கிலாந்து நாட்டில் அதிக அளவில் நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களில் இவருக்கு இரண்டாவது இடம். இது தவிர 12 பெரிய எஸ்டேட்களும் உள்ளன. பெண்கள் உடையான வேரோ மோடா, ஜேக் அண்டு ஜான்ஸ் ஜீன்ஸ் போன்றவை ஆன்டர்சனுக்குச் சொந்தமான ‘பெஸ்ட் செல்லர்’ நிறுவனத்தின் தயாரிப்புகளில் பிரபலமானவை. #SriLankablasts