யானை தாக்கி விவசாயி படுகாயம் 
செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம்

தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள பேவநத்தம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது56). இவர் நேற்று தனது விவசாய நிலத்திற்கு காவலுக்கு சென்றார்.

அப்போது ஒரு ஒற்றை யானை பயிர்களை மேய்ந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த லட்சுமணன் உடனே அந்த யானையை விரட்டி அடிக்க முயன்றார். அப்போது அந்த யானை தனது தும்பிக்கையால் லட்சுமணனை தூக்கி வீசியது.

இதில் படுகாயம் அடைந்த லட்சுமணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.