டெங்கு காய்ச்சல் 
செய்திகள்

டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை: பழைய இரும்பு கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக கூறி இரும்பு கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பகுதியில் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின் பேரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

இதையடுத்து காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் கே.மகேந்திரன், நகர் நல அலுவலர் டாக்டர் முத்து மற்றும் சுகாதாரத்துறையினர் காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் பழையஇரும்பு பொருட்களை விற்கும் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு 4 டன் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது தெரிய வந்தது. உடனே அதனை அங்கிருந்து அகற்ற உத்தர விடப்பட்டது.

இதையடுத்து அதன் உரிமையாளர் பலராமன் ஒரு வண்டி மூலம் அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இந்த நிலையில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக கூறி இரும்பு கடை உரிமையாளர் பலராமனுக்கு நகராட்சி சுகாதாரத்துறையினர் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.