செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு-வைரஸ் காய்ச்சலுக்கு 3 பேர் பலி

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Denguefever

மாலை மலர்

மதுரை:

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாள்தோறும் ஏராளமானோர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிலர் பலியாகி வருகின்றனர்.

அலங்காநல்லூர் கம்மாபட்டியைச் சேர்ந்த வர் ராஜபாண்டி மகன் கணேஷ் பாண்டி (வயது8). உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12 மணிக்கு கணேஷ்பாண்டி பரிதாபமாக இறந்தான்.

வில்லாபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மகன் சரவணன் (39) தொழிலாளி. பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர் நள்ளிரவு 1 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

இதே போல் கமுதியைச் சேர்ந்த மூக்கம்மாள் (57) வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்தும் பல னின்றி அதிகாலை 3 மணிக்கு இறந்தார்.

இந்த நிலையில் மேலும் 116 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 98 பேர் வைரஸ் காய்ச்சலாலும், 15 பேர் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Denguefever