செய்திகள்

பண மதிப்பு நீக்க நடவடிக்கை 38 சதவீதம் வெற்றி - கருத்து கணிப்பில் தகவல்

பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பத்திரிகை ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 38 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மாலை மலர்

புதுடெல்லி:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையடுத்து ‘இக்கனாமிக் டைம்ஸ்’ பத்திரிகை ஆன்லைன் மூலம் இது தொடர்பாக கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் 10 ஆயிரம் பேர் பங்கேற்று வாக்களித்தனர்.

அதில் ஒட்டுமொத்தமாக பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு 38 சதவீதம் பேர் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது என்று கூறினர். 30 சதவீதம் பேர் தோல்வி கண்டுவிட்டதாக கூறினர். 32 சதவீதத்தினர் இரண்டும் கலந்து ஏற்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக 26 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 32 சதவீதத்தினர் இதன் காரணமாக பொருளாதாரத்தில் வெளிப்படைத் தன்மை ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டனர். 42 சதவீதம் பேர் சில பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும் அதிகமான வெளிப்படைத் தன்மை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.