செய்திகள்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி இந்திய கம்யூ. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

புதுவையில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி 10 இடங்களில் நாளை இந்திய கம்யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

மாலை மலர்

புதுச்சேரி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் அரசு ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டு காலத்தில் தொடர்ச்சியாக மக்கள் மீது பல்வேறு வரி களை சுமத்தி வருகிறது. குறிப்பாக பஸ் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி, குப்பை வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டணம் 200 மடங்கு உயர்த்தி மக்களை வாட்டி வதைத்துள்ள நிலையில் மீண்டும்கடந்த 1-ந் தேதி முதல் மின் கட்டண உயர்வை பலமடங்கு உயர்த்தி உள்ளது.

அறிவிக்கப்படாத மின்வெட்டு பல நேரங்களில் தொடர்கிறது. மேலும், பெரிய, பெரிய தொழிற்சாலை நிறுவனங்களும் வர்த்தக நிறுவனங்களும் செலுத்தப் படாமல் நிலுவையில் உள்ள மின் கட்டண வரி கோடிக்கணக்கில் வசூல் செய்யப்படாமல் உள்ளது.

முறையாக அதை வசூலித்தாலே இது போன்ற மின் கட்டண உயர்வு அவசியமற்றதாகும். மின் விநியோகத்தை சீரமைத்து மின் திருட்டை தடுக்க முடிய வில்லை.

இவைகளுக்கு மாறாக அரசு மக்கள் மீது மீண்டும், மீண்டும் வரியை உயர்த்தி மக்களை பாதிப்புக்கு ஆளாக்கி வருகிறது.

தற்போது உயர்த்தி உள்ள மின் வரியை மின் ஒழுங்கு முறை ஆணையம் உயர்த்தி உள்ளது என்று காங்கிரஸ் அரசு தப்பித்து கொள்வது கண்டனத்துக்குரியது.

அரசு நினைத்தால் எதையும் மாற்றலாம். எனவே, உயர்த்தி உள்ள மின்சார வரியை திரும்ப பெற வேண்டும் என புதுவை காங்கிரஸ் அரசை கண்டித்து 10 இடங்களில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் பங்கு பெற வேண்டுகிறோம்.

இவ்வாறு சலீம் அறிக்கையில் கூறியுள்ளார்.