சென்னை:
சென்னையில் வழிப்பறி சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 ஷிப்டுகளாக போலீசாருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களாக இந்த ஷிப்டு முறை கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குற்றச் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டே இருக்கிறது.
சென்னையில் தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து செல்போன், செயின்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்கள் ஆட்டோவில் சென்ற வெளிமாநில மாணவரை சரமாரியாக தாக்கி கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியை சேர்ந்த மாணவர் நித்தீஷ். இவர் சென்னைக்கு சுற்றுலா வந்தார். மத்திய கைலாஷ் பகுதியில் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ள நித்திஷ் நேற்று இரவு அதே பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வழிப்பறி கொள்ளையர்கள் ஆட்டோவை வழிமறித்து நித்திசை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயக்கம் அடைந்தார்.
அவரிடம் இருந்த நகை, செல்போன், பணம், லேப்டாப் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதனையடுத்து நித்திசை நடுரோட்டில் தூக்கி போட்டு விட்டு வழிப்பறி கும்பல் ஆட்டோவில் தப்பிச் சென்றது. ஆட்டோ டிரைவரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
அங்கு இருந்தவர்கள் நித்திசை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews