புதுடெல்லி:
பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவையும் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றியமைக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், புதிய மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு 2 இடங்கள் வழங்குமாறு வலியுறுத்தவே இந்த சந்திப்பு நடந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் இந்த தகவலை தம்பிதுரை தரப்பு மறுத்துள்ளது. இலங்கை அரசு கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடியையும், டெல்லி மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரையும் சந்தித்ததாக கூறப்பட்டது.