புதுடெல்லி:
இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 17-ம் தேதி கே.சி.பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் விவகாரத்தை மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் வாதாடினார்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சி பொதுச்செயலாளரை நீக்க தீர்மானம் போட்டனர், பொதுச்செயலாளரை நீக்க அதிகாரமில்லை ஜெயலலிதா தேர்வுசெய்யப்பட்டதுபோல் தான் சசிகலாவும் பொதுச்செயலாளராக தேர்வானார் என டிடிவி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம். அன்றைய தினம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் வாதத்தை தொடங்க உள்ளார். #tamilnews