செய்திகள்

சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீது 12-ம் தேதி தீர்ப்பு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் 12-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது.

மாலை மலர்

புதுடெல்லி:

இரட்டை இலை  சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர் தனது ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, சுகேஷின் வழக்கறிஞர் ஆஜராகி, இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. இன்றும் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதங்களை முன்வைத்தனர். அத்துடன் விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து, 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.