உறவினர் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உயிர் இழந்தார். அவர் மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.
240 கோடி காப்பீட்டு தொகைக்காக ஸ்ரீதேவி கொல்லப்பட்டிருக்கலாம் என்று இயக்குநர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘ஐக்கிய அரபு நாடுகளில் விபத்து காரணமாக இறந்தால் மட்டுமே அந்த தொகை கிடைக்கும் என்று இருக்கிறது. 5.7 அடி உயரமுள்ள ஸ்ரீதேவி எப்படி 5.1 அடி குளியல் தொட்டியில் மூழ்க முடியும்?’ என்று சந்தேகம் எழுப்பி இருந்தார். ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்திவரும் வேத் பூஷன் என்ற முன்னாள் டெல்லி துணை காவல் ஆணையர் சில தகவல்களை தனது ஆராய்ச்சிக்கு பின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இதுபற்றி அவர் அளித்து இருக்கும் பேட்டியில், ‘ஸ்ரீதேவி மரணம் அடைந்த விதத்தை பார்த்தாலே அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று தெளிவாக தெரிகிறது. ஒருவரை குளியல் தொட்டியில் வலுக்கட்டாயமாக இறக்கி நீரில் மூழ்கடித்து அவர் மூச்சு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்கலாம். அவ்வாறு செய்யும்போது தடயமே இல்லாமல் செய்துவிட்டு அது தானாக நடந்தது போன்று காண்பிக்கலாம்.