புதுடெல்லி:
டெல்லியில் உள்ள ரோகிணி செக்டார் பகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வருபவர் டாக்டர் குக்ரெஜா. இவரிடம் பெண் ஊழியராக பணியாற்றியவர் சுதாபா முகர்ஜி.
இந்த நிலையில் ரோகிணி செக்டார்-13 பகுதியில் காருக்குள் டாக்டர் குக்ரெஜாவும், சுதாபா முகர்ஜியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடல்களையும் மீட்டனர். குக்ரெஜா கையில் துப்பாக்கி இருந்தது. அவர் சுதாபா முகர்ஜியை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போலீஸ் விசாரணையில் 62 வயதான டாக்டர் குக்ரெஜாவுக்கு திருமணமாகி மனைவி மகன்-மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அவருக்கும், சுதாபா முகர்ஜிக்கும் (50) பழக்கம் இருந்துள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
சுதாபா முகர்ஜிக்கு திருமணமாகி கணவர் ஒரு மகன் உள்ளனர். இதற்கிடையே சுதாபா முகர்ஜி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி குக்ரெஜாவிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் இருவரும் காரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திருமணம் செய்து கொள்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த குக்ரெஜா துப்பாக்கியால் சுதாபாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.