ப சிதம்பரம் 
செய்திகள்

மாநில கமிட்டிகளை மூடி விடலாமா?- ஆம் ஆத்மி வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த ப. சிதம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு

டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு பாராட்டு தெரிவித்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு ஷர்மிஸ்தா முகர்ஜி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

பா.ஜனதா 8 தொகுதிகளை பிடித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 63 தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்தது.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பாராட்டியுள்ளனர்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தை கொண்ட பா.ஜனதாவை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் தோற்கடித்துள்ளனர். 2021-22-ம் ஆண்டுகளில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று கூறி உள்ளார்.

இந்தநிலையில், ப.சிதம்பரம் ஆம் ஆத்மி வெற்றியை பாராட்டியதை டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவியும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளுமான ‌ஷர்மிஸ்தா முகர்ஜி விமர்சனம் செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரத்தின் பதிவை வெளியிட்டு அதில் கூறி இருப்பதாவது:-

இப்படியே, பா.ஜனதாவை தோற்கடிக்கும் பொறுப்பை மாநில கட்சிகளுக்கு கொடுத்து விட்டால் மாநில காங்கிரஸ் கமிட்டிகள், தங்களுடைய கடையை இழுத்து மூடிவிடலாம்.

இவ்வாறு அவர் காட்டமாக கூறி உள்ளார்.