ஐபிஎல் தொடரில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சமீபத்தில் நடந்தது. ஆட்டம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திராத நிலையில், ஏர்டெல் நிறுவனம் மைதானத்தில் செய்திருந்த விளம்பரம் அங்கிருந்தவர்கள் மட்டுமின்றி அனைவரையும் ஈர்த்துள்ளது.
அனைவரையும் கவர்ந்ததால் பிரம்மாண்ட அளவில் அந்த விளம்பரம் இருந்ததாக எண்ணிக்கொள்ள வேண்டாம். சில டிஷர்ட்டுகள்தான் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மைதானத்தில் அங்கங்கு சில நாற்காலிகளில் சிவப்பு நிற டிஷர்ட்டுகள் போடப்பட்டிருந்தன.
அதில், “டிராப்பிக்கில் மாட்டிக்கொண்டீர்களா? இந்த போட்டியை லைவாக காணுங்கள்” என ஏர்டெல் விளம்பரம் செய்திருந்தது. ஐபிஎல் போட்டியை ஏர்டெல் நேரடியாக ஒளிபரப்பு செய்வதால், இந்த மாறுபட்ட விளம்பர யுக்தியை அந்நிறுவனம் கையாண்டுள்ளது.
மேலும், “ஆபிஸில் இன்னும் இருக்கிறீர்களா? இந்த போட்டியை லைவாக காணுங்கள்”, “இங்கே உட்கார முடியாது”, “நான் ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என பல்வேறு வாசகங்கள் கொண்ட டிஷர்ட்டுகள் அங்கங்கு சீட்டுகளின் மேல் போடப்பட்டிருந்தன.
மைதானத்தில் உள்ளவர்கள் இதனை புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய, நெட்டிசன்கள் வைரலாக பரப்பினர். “இந்த விளம்பர யுக்தியை அறிமுகப்படுத்திய நபருக்கு இன்னேரம் பதவி உயர்வு கிடைத்திருக்கும்” என சிலர் நக்கலாக கருத்து பதிவிட்டுள்ளனர்.