செய்திகள்

கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் - சரத்யாதவ்

அரசியல் சாசனத்தை காக்க கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் கூறினார். #Karnatakaelections

ஐக்கிய ஜனதாதளம் (சரத்யாதவ் அணி) தலைவர் சரத்யாதவ் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதவாத கட்சியான பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதற்காக காங்கிரஸ் அல்லது ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைக்க நாங்கள் தயாராக உள்ளோம். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

பெங்களூருவில் இன்னும் 2 நாட்கள் தங்கி இருப்பேன். அதற்குள் கூட்டணி குறித்து முடிவை அறிவிப்பேன். ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் நாங்கள் ஒரு சுற்று ஆலோசனையை நடத்தி இருக்கிறோம். கர்நாடக தேர்தலை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த தேர்தல் அரை இறுதி போட்டி போன்றது ஆகும்.

நாட்டின் அரசியல் சாசனத்தை காக்க வேண்டும் என்றால் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும். பா.ஜனதா அல்லாத நாட்டை உருவாக்க கர்நாடகம் தொடக்கமாக அமைய வேண்டும். மதவாதத்தால் நாட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. பீகாரில் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். அங்கு பா.ஜனதா தோல்வி அடைந்தது.

ஆனால் எங்கள் கட்சி முதல்-மந்திரி நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் சேர்ந்து கொண்டார். என்ன இருந்தாலும் நாங்கள் பா.ஜனதாவுக்கு எதிராக தீவிரமாக போராடுவோம். விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பியோடி 3-வது திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு பா.ஜனதா தான் காரணம். ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டதால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக பிரதமர் மோடி கூறினார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை.