செய்திகள்

ஹெலிகாப்டர் ஊழல் தரகருக்கு விஜய் மல்லையாவுடன் தொடர்பு - டெல்லி கோர்ட்டில் பரபரப்பு தகவல்

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் பீக் தல்வாருக்கும், தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கும் தொடர்பு உள்ளதாக டெல்லி கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு தரப்பில் கூறப்பட்டது. #DeepakTalwar #VijayMallya

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு அதிநவீன அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்குவதற்கு இத்தாலி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில் இடைத்தரகராக செயல்பட்டவர் என கூறப்படுகிற தீபக் தல்வார் துயாயில் இருந்து நாடு கடத்தி வரப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் காவலில் வைத்து விசாரிக்கப்படுகிறார்.

நேற்று அவர் டெல்லி தனிக்கோர்ட்டில் நீதிபதி எஸ்.எஸ். மான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கும், பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன்கள் வாங்கி விட்டு லண்டனுக்கு தப்பிவிட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கும் தொடர்பு உள்ளதாக அமலாக்கப்பிரிவு தரப்பில் கூறப்பட்டது.

மேலும், வெளிநாட்டில் உள்ள தல்வாரின் மகன் வரும் 11-ந்தேதி ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவருடன் வைத்து தல்வாரை விசாரிக்க வேண்டி உள்ளதாகவும் கூறி, தல்வாரின் அமலாக்கப்பிரிவு காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.