நாகை மாவட்டம் சீர்காழியில் எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவை சார்பில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.
இதில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஜனநாயக ஆட்சி நடக்கும் இக்காலகட்டத்தில் மக்களின் போராட்டத்தை கையாள பல்வேறு வழிகள் உள்ளன.
பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்திற்கு 99 நாட்கள் ஆதரவு அளித்தது இந்த அரசுதான். திடீரென போராட்ட மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டனத்துக்குரியது. இந்த மக்கள் விரோத ஆட்சி உடனடியாக கலைக்கப்படவேண்டும்.
கர்நாடகா மீது உள்ள அக்கறைக் கூட தமிழகத்தின் மீது மத்திய அரசிற்கு இல்லை. டி.டி.வி.தினகரன் தற்போது தனி கட்சி ஆரம்பித்துள்ளார். அதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்னும் சில காலங்களில் தினகரன் கட்சி செயல் இழந்து விடும்.