செய்திகள்

போயஸ் கார்டனை நினைவு இல்லம் ஆக்குவதா?: கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் தீபா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தெரிவித்திருந்தார். மேலும், ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இது குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளருமான ஜெ. தீபா செய்தியார்களிடம் கூறியதாவது:

போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற உத்தரவிடக் கூடாது. முதலமைச்சர் போயஸ் கார்டனை நினைவிடமாக மாற்றுவதாக அறிவித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என்பது கபட நாடகம்.

மாநில அரசு நடத்தும் விசாரணை சரியாக நடக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு தலையிட்டு ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.