செய்திகள்

மிகைப்படுத்தல்களை களைவதற்காக வரலாற்றை மீண்டும் எழுத வேண்டியது அவசியம் - அரவிந்த் ஜம்கேட்கர்

இந்தியாவின் முந்தையை வரலாற்றில் காணப்படும் மிகைப்படுத்தல்களை களைவதற்காக மீண்டும் அதை எழுத வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழு தலைவர் தெரிவித்துள்ளார். #ICHRchief #History

மாலை மலர்

புதுடெல்லி:

இந்திய வரலாற்றை முன்னர் எழுதிய வெளிநாட்டினர் சில அதிகப்படியான குறைபாடுகளையும், மிகைப்படுத்தல்களையும் பதிவு செய்து விட்டு சென்றுள்ளதால் நடந்தவற்றை நடந்தவாறு இந்திய வரலாற்றை புணரமைக்க வேண்டும் என்னும் குரல் பரவலாக எழும்பியுள்ளது.

இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்காக மத்திய வரலாற்று ஆய்வாளர்களை கொண்ட ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கண்காணிப்பில் உள்ள குழுவினர் இந்திய வரலாற்றை திருத்தி எழுத முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மொகலாய மன்னர்கள் காலத்து ஆட்சி சிறப்புகளை இருட்டடிப்பு செய்யவும், இந்துத்துவா கொள்கையை திணிக்கவும், இந்தியாவின் பூர்வகால குடிமக்கள் இந்துக்கள்தான் என்று ஆவணப்படுத்தி, பழைய வரலாற்றை சிதைக்கவும் மத்திய அரசு முயற்சித்து வருவதாக அவர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் முந்தையை வரலாற்றில் காணப்படும் மிகைப்படுத்தல்களை களைவதற்காக மீண்டும் அதை எழுத வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழு தலைவர் அரவிந்த் ஜம்கேட்கர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் எழுதுவது என்பது வரலாறு எழுதுவதன் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. காலகாலமாக முந்தைய ஆசிரியர்களால் சரியாக பதிவு செய்யப்படாத சம்பவங்களை பின்னாளில் வரும் வரலாற்றாசிரியர்கள் மாற்றி எழுதி வந்துள்ளனர். அப்படி எழுதுவதன் மூலம் மிகைகள் எல்லாம் நீக்கப்பட்ட ஆரோக்கியமான வரலாறு எதிர்கால தலைமுறையை சென்றடையும்.

அதனால், இந்திய வரலாற்றை மீண்டும் எழுதுவது தொடர்பாக நாட்டில் நடைபெற்றுவரும் விவாதம் தேவையற்றது. முந்தைய வரலாற்றை திருத்துவதோ, பாடத்திட்டத்தில் எது இணைக்கப்பட வேண்டும்? என்பதை தீர்மானிப்பதோ இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழுவின் நோக்கமல்ல.

ஆனால், வரலாற்ற மீண்டும் எழுதுவது தொடர்பாக புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர்களை ஊக்குவிப்பது எங்களின் பணியாக இருந்து வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். #tamilnews  #ICHRchief #History