செய்திகள்

குரங்கணி காட்டுத்தீ விபத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆனது

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி நேற்றுவரை 14 பேர் உயிரிழந்திருந்த நிலையில், மதுரையில் சிகிச்சை பெற்று வந்த சத்யகலா மற்றும் தேவி ஆகிய இருவரும் இன்று மரணமடைந்தார். #TheniFire

மதுரை:

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ம் தேதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அணுவித்யா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக மரணமடைந்தனர். 

இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா மற்றும் சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதன் மூலம், பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. #TheniFire