செய்திகள்

‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்ற ஈராக் அழகிக்கு கொலை மிரட்டல்

இஸ்ரேலிய அழகியுடன் சேர்ந்து ‘செல்பி’ எடுத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்ற ஈராக் அழகிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்ற ஈராக் அழகிக்கு ஒரு பிரிவினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர், இஸ்ரேலிய அழகியுடன் சேர்ந்து ‘செல்பி’ எடுத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

கடந்த மாதம் 26-ந்தேதி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் ‘மிஸ் யுனிவர்ஸ்’ என்னும் பிரபஞ்ச அழகிப் போட்டி நடந்தது. இதில் ஈராக் நாட்டின் சார்பில் 27 வயது சாரா இடான் கலந்து கொண்டார். அவர் பாடகியும், பாடல் கவிஞரும் ஆவார். அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் அவருக்கு, 45 ஆண்டுகளுக்கு பிறகு பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்ற முதல் ஈராக் பெண் என்ற பெருமையும் கிடைத்தது.

இறுதிச்சுற்றுக்கு அவரால் முன்னேற முடியவில்லை என்றாலும் கூட ஈராக் நாட்டின் சார்பில் அவர் பங்கேற்றதே உலக அளவில் மிகப் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் சாரா இடான் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். அவர் பிரபஞ்ச அழகிப்போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் நான் வானுலகில் பறக்கிறேன் என்றும் குதூகலித்தார்.

இந்த சந்தோஷம் சாரா இடானுக்கு வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. கடந்த 2 வாரங்களாக அவருக்கும், ஈராக்கில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.பிரபஞ்ச அழகிப்போட்டியின்போது சாரா இடானும், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அழகி அடார் காண்டெல்ஸ்மேனும் சேர்ந்து ‘செல்பி’ எடுத்துக் கொண்டார்.

அந்த போட்டோவின் கீழே, “எங்களுக்கு இடையே எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் அமைதியின் தூதுவர்களாக இருக்கிறோம். நாங்கள் அன்பையும், அமைதியையுமே விரும்புகிறோம்” என்று அடிக்குறிப்பு எழுதி அதை சமூக ஊடகங்களில் பரவ விட்டார். இந்த படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதுதான் அவருக்கு வினையாக அமைந்து விட்டது.

இஸ்ரேலுக்கும், ஈராக்கிற்கும் இடையே பல ஆண்டுகளாக பகைமை உண்டு. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஈராக் நாட்டின் ஒரு பிரிவினர் உடனடியாக சமூக வலைத்தளங்களில் இருந்து இஸ்ரேல் அழகியுடன் இருக்கும் படத்தை நீக்கு இல்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தினரையும் விட்டு வைக்க மாட்டோம் என்று சாரா இடானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதேபோல் மிஸ் ஈராக் போட்டியை நடத்திய அமைப்பும் அந்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கும்படி அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாக்தாத் நகரில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இணையதளம் மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள சாரா இடான் மீண்டும் தனது தாய் நாட்டுக்கு திரும்புவது கேள்விக்குறியாக உள்ளது.

அதேநேரம் தொடர் கொலை மிரட்டல்களால் அவருடைய குடும்பத்தினர் நாட்டை விட்டு சமீபத்தில் ரகசியமாக வெளியேறி விட்டது தற்போது தெரிய வந்துள்ளது.