செய்திகள்

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் - கமிஷனர் அலுவலகத்தில் புகார்

முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் புகார் அளித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக இருப்பவர் வினோச் பி செல்வம். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

முகநூல் (பேஸ்புக்) பக்கம் ஒன்றில் பேராசிரியை ஒருவர் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில், ‘ஜனநாயக முறைப்படி மோடியை துடைத்தெறிய எண்ணுகிறோம், முடியாது என்றால் வரலாறு காட்டும் வழியை தயங்காது தேர்வு செய்வோம்’ என்று அந்த பேராசிரியை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதே பேராசிரியை வரலாறு காட்டும் வழி என்பது ஆயுதம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அந்த பேராசிரியை பதிவு செய்த கருத்தானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த பேராசிரியை குறிப்பிட்டது பாரத பிரதமர் நரேந்திர மோடியை ஆயுதத்தால் அகற்றுவோம் என்று பொருள் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதத்தின் மூலம் படுகொலை செய்வோம் என்ற பொருளில் அந்த பேராசிரியை குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் பிரதமரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த குறிப்பிட்ட பேராசிரியை சதி செய்யலாம் என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமராகி இருக்கும் நரேந்திர மோடிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேராசிரியை இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எனவே குறிப்பிட்ட பேராசிரியை மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.