செய்திகள்

பூண்டி ஏரியில் 2-வது நாளாக செத்து மிதக்கும் மீன்கள்

பூண்டி ஏரியில் இன்று 2-வது நாளாகவும் ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் செய்வது அறியாமல் அதிகாரிகள் திகைத்து உள்ளனர். #PoondiLake

ஊத்துக்கோட்டை:

பூண்டி ஏரியில் மீன்வளத்துறை சார்பில் மிதவை தொட்டிகள் அமைத்து மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

டெண்டர் மூலம் மீன்கள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கோடை வெயில் காரணமாக ஏரியில் நீர்மட்டம் வெறும் 12 மில்லியன் கன அடியாக குறைந்தது. இதனால் கடும் வெப்பம் மற்றும் போதிய நீர் இல்லாததால் ஏரியில் இருந்த மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கின.

நேற்று அதிக அளவில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது. இதனால் பூண்டி ஏரி முழுவதும் துர்நாற்றம் வீசியது.

பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ், பொறியாளர் சந்திரசேகர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், கட்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் தொழிலாளர்கள் மூலம் செத்து மிதந்த மீன்களை படகில் சென்று அகற்றப்பட்டது.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் பூண்டி ஏரியில் ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இதனால் செய்வது அறியாமல் அதிகாரிகள் திகைத்து உள்ளனர். அந்த மீன்களையும் அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஏரியில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் அனைத்து மீன்களும் இறக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. #PoondiLake

SCROLL FOR NEXT