கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள சொத்தவிளை கடற்கரையில் நேற்று காலையில் ராட்சத டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
தகவல் அறிந்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய டால்பினை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடல் வாழ் உயிரினங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதால் இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் திலீபன், வனவர் பிரசன்னா, வனகாப்பாளர்கள் பிரபாகர், ராஜேந்திரன், துரைராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டால்பினை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். டால்பின் அழுகியநிலையில் இருந்ததால் கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் நாகர்கோவில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் நோபிள், பறக்கை அரசு கால்நடை மருத்துவமனை உதவி டாக்டர் ஜெயராம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று டால்பினை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த டால்பினை கடற்கரையிலேயே புதைத்தனர்.