செய்திகள்

கருங்கல்பாளையத்தில் பூட்டிய வீட்டுக்குள் 2 நாளாக கிடந்த பிணம்

கருங்கல்பாளையத்தில் பூட்டிய வீட்டுக்குள் 2 நாளாக மல்லார்ந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஈரோடு:

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தை சேர்ந்தவர் பாபுலால் (வயது 50). பாபுலால் ஈரோடு கருங்கல்பாளையம் கந்தசாமி இரண்டாவது வீதியில் கடந்த இரண்டு வருடமாக வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். பாபுலால் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பாபுலால் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து ஒரு வீட்டின் கதவை தட்டினர் ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை. வீடு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது.

இது குறித்து கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாபுலால் மல்லார்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இது குறித்து ராஜஸ்தானில் உள்ள பாபுலால் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.