செய்திகள்

வார்னருடன் தென்ஆப்பிரிக்கா ரசிகர் தகராறு

தென் ஆப்பிரிக்கா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்க ரசிகர்கருடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.#SAvAUS #DavidWarner

மாலை மலர்

தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் அதிரடியாக 14 பந்துகளில் 30 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர், ரசிகர் ஒருவருடன் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டம் இழந்து மைதானத்தை விட்டு வெளியேறி ஓய்வறையை நோக்கி வார்னர் நடந்த போது, அருகில் வந்த ரசிகர் ஒருவர் ஏதோ கூற வார்னர் கோபமடைந்தார். அந்த ரசிகருடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார். அந்த ரசிகரும் திட்டினார். பின்னர் மைதான பாதுகாப்பு ஊழியர் தலையிட்டு அமைதிப்படுத்தினார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திடம் எழுத்து பூர்வமாக புகார் அளித்து இருக்கிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் லீமேன் கூறியதாவது:-

ரசிகர்களின் செயல் அவமானகரமானது. இந்த தொடரில் டேவிட் வார்னர் மட்டுமல்ல மற்ற ஆஸ்திரேலிய வீரர்களிடம் தென்ஆப்பிரிக்க ரசிகர்கள் அத்துமீறி வீரர்களின் குடும்பம் மற்றும் உறவினர்களை விமர்சிக்கிறார்கள். இந்த டெஸ்ட் தொடரில் அதுபோன்று பல சம்பவங்கள் நிறைய நடந்து இருக்கிறது. ரசிகர்களின் அத்துமீறல் செயல் நடக்ககூடாது. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்து இருக்கிறோம். அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.