செய்திகள்

தாஸ்னா சிறையின் பல் மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்: உ.பி. அரசு முடிவு

பல் மருத்துவ தம்பதியர் ராஜேஷ் தல்வார்-நூபுர் தம்பதியரால் தாஸ்னா சிறைச்சாலையில் நடத்தப்பட்ட பல் மருத்துவமனைக்கு அவர்களின் மகள் ஆருஷியின் பெயரை சூட்ட அரசு முடிவு செய்துள்ளது.

மாலை மலர்

டெல்லி அருகே நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவ தம்பதியரான ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வாரின் மகள் ஆருஷி தல்வார் கடந்த 2008-ம் ஆண்டு வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர். வீட்டின் மாடியில் வேலைக்காரர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை வழக்கில், ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நூபுல் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் இருவரையும் கடந்த 12ம் தேதி விடுதலை செய்தது. இதையடுத்து 16-ம் தேதி அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

2013-ம் ஆண்டு முதல் தாஸ்னா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் இருவரும் கைதிகளுக்கு பல் மருத்துவம் பார்த்து வந்தனர். இதற்காக சிறை மருத்துவமனையில் சிறப்பு பல் மருத்துவமைனை அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது அவர்கள் இருவரும் விடுதலை அடைந்துவிட்ட நிலையில், அந்த மருத்துவமனைக்கு ஆருஷியின் பெயரை வைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவ தம்பதியரின் வேண்டுகோளை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக சிறைத்துறை மந்திரி ஜெய் குமார் சிங் தெரிவித்தார்.