புதுடெல்லி:
வங்கக் கடலில் உருவான பானி புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை மதியம் புரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும்போது சுமார் 210 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து ஒடிசாவில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்பு பணிகளுக்காக தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பானி புயல் மீட்பு நிவாரண பணிகளுக்கு அனைத்து விமான நிறுவனங்களும் உதவ வேண்டும் என விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பானி புயல் மீட்பு நிவாரண பணிகளுக்கு அனைத்து விமான நிறுவனங்களும் உதவ வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும். அரசின் நிவாரண மையங்களுக்கு மட்டுமே நிவாரண பொருட்கள் சென்று சேரவேண்டும் என பதிவிட்டுள்ளார். #CycloneFani #Fani #SureshPrabhu