ராஜபாளையம்:
ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா ரைட்டன்பட்டியைச் சேர்ந்த கருப்பையா (வயது 19), கரைவளர்த்தான் பட்டியைச் சேர்ந்த நவீன் குமார் (19) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் பணியில் இருந்தபோது, பஸ் நிலையத்தின் எதிரே உள்ள அம்மன் பொட்டல் தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மகன் இளஞ்செழியன், மாரிச்செல்வம், ஜோதி, சுந்தர்ராஜ், அஜய் மற்றும் 3 பேர் அங்கு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்கள் காசு கொடுக்காமல் பெட்ரோல் கேட்டனர். ஆனால் கருப்பையாவும், நவீன்குமாரும் கொடுக்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 8 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
நேற்று மதியம் அவர்கள் மீண்டும் பெட்ரோல் பங்க் வந்தனர். அப்போது பணியில் இருந்த கருப்பையா மற்றும் நவீன்குமாரை அரிவாள், கத்தி, கம்பு போன்றவற்றால் தாக்கினர்.
இதில் கருப்பையாவுக்கு தலையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. நவீன்குமாருக்கு இடது காலில் வெட்டு விழுந்தது.
இது குறித்து ராஜ பாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் கருப்பையா புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஜேசு ஆகியோர் விசாரணை நடத்தி இளஞ்செழியன் உள்பட 8 பேரை தேடி வருகின்றனர். இதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.