செய்திகள்

கேரளாவில் போலீஸ் காவலில் வாலிபர் பலி - 3 போலீசார் சஸ்பெண்ட்

கேரளாவில் போலீஸ் காவலில் இருந்த வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக 3 போலீசாரை சஸ்பெண்டு செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

எர்ணாகுளம் அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்த வரப்புழா என்ற இடத்தை சேர்ந்த ஒரு முதியவரின் வீட்டை ஒரு கும்பல் சூறையாடியது. இதில் மனமுடைந்த அந்த முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக அந்த முதியவரின் குடும்பத்தினர் வரப்புழா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்ற வாலிபரை கைது செய்தனர்.

அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீஜித் பரிதாபமாக இறந்துபோனார்.

போலீஸ் நிலையத்தில் வைத்து ஸ்ரீஜித்தை போலீசார் விசாரணை என்ற பெயரில் தாக்கியதால்தான் அவர் இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள். மேலும் முதியவர் தற்கொலைக்கும், ஸ்ரீஜித்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஆள் மாறாட்டத்தில் அவரை போலீசார் கைது செய்து அடித்து கொன்றுவிட்டதாக புகார் எழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். வரப்புழா பகுதியில் நேற்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.