கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் அறிவுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் சாதாரண உடல்நல பிரச்சினைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.
இந்த நிலையில் டாக்டர்கள் ஆன்லைன் கிளினிக் ஒன்றை ஆரம்பித்து பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். இந்த ஆன்லைன் மருத்துவ கிளினிக்கை நாடு முழுவதும் 180 டாக்டர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர்.
நோயாளி அல்லது அவர்களது குடும்பத்தினர் 98408 76460 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்ப வேண்டும். பின்னர் நோயாளியின் பெயர், வயது, பாலினம், உடல்நலப்பிரச்சினை, முன்பே இருக்கும் நோய், தற்போது பயன்படுத்தும் மருந்துகள் ஆகிய விவரங்களை கேட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.
எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாதவர்கள் ஆடியோவாக தகவல்களை அனுப்பலாம். அவை அத்தியாவசியம் மற்றும் அத்தியாவசியமற்ற தேவை என மதிப்பிட்ட பிறகு அவை மருத்துவர்களுக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுக்களில் அனுப்பப்படும்.
பின்னர் சம்பந்தப்பட்ட நோய்க்கான நிபுணர் அல்லது டாக்டர் நோயாளிகளிடம் தொடர்பு கொண்டு பேசுவார்.
இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் சிலர் வெளிநாட்டில் இருந்தும் தொடர்பு கொண்டுள்ளனர்.
ஒரு நோயாளிகளுக்கு 10 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இந்த ஆன்லைன் சிறப்பு டாக்டர்கள் குழு நரம்பியல், அறுவை சிகிச்சை, நீரிழிவு நோய், இதயவியல், குழந்தை மருத்துவம், எலும்பியல், தோல் நோய் உள்ளிட்டவைகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
பெரும்பாலும் நோயாளிகளிடம் இருந்து குழந்தை மருத்துவம், நீரிழிவு நோய், தோல் நோய் மற்றும் வயிற்று வலி போன்ற பொது ஆலோசனை தொடர்பாகவே அதிகமாக ஆலோசனை கேட்கப்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
நீரிழிவு நோயாளிகளுக்கு தற்போது ஊரடங்கால் அவர்கள் பயன்படுத்தும் மருந்துகள் கிடைக்காததால் அதற்கு பதில் வேறு எந்த மருந்தை பயன்படுத்தலாம் என்று கேட்கிறார்கள்.