செய்திகள்

கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் எம்.சி.சம்பத் பதவி பறிப்பு: தினகரன்

கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ள அமைச்சர் எம்.சி. சம்பத் பதவியை டி.டி.வி. தினகரன் பறித்தார்.

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க. நிர்வாகிகளின் பதவிகளை டி.டி.வி. தினகரன் தொடர்ந்து பறித்து வருகிறார்.

கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ள அமைச்சர் எம்.சி. சம்பத் பதவியை பறித்து விருத்தாசலம் நகர செயலாளராக உள்ள வி.டி. கலைச்செல்வனுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வழங்கி உள்ளார்.

கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ள அருண்மொழித்தேவன் எம்.பி.யை மாற்றி விட்டு காட்டுமன்னார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.கே.பாலமுருகனிடம் மாவட்ட செயலாளர் பதவியை வழங்கி உள்ளார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக உள்ள பொன்ராஜா விடுவிக்கப்பட்டு மாணவர் அணி செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம்.அருள்பழனி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் எஸ்.ஆர்.தர்மலிங்கம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொறுப்பில் கே.ஆர்.பால சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.