செய்திகள்

ஹர்மன்பிரீத் கவுருக்கு டி.எஸ்.பி பதவி: பஞ்சாப் முதல்வர் உறுதி

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்பிரீத் கவுருக்கு டி.எஸ்.பி. பதவி அளிக்கப்படும் என பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆனாலும், இந்திய வீராங்கனைகள் இங்கிலாந்து அணியினருக்கு கடும் நெருக்கடியை தந்தனர். இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி 51 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தை சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுருக்கு டி.எஸ்.பி. பதவி அளிக்கப்படும் என
முதல்-மந்திரி அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமரிந்தர் சிங் டுவிட்டரில் பதிவிடுகையில், ’’பெண்கள் உலகக் கோப்பை அரையிறுதியில் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடியதையும், இறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி தந்ததையும் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவரது ஆட்டத்தால் பஞ்சாப் மாநிலம் பெருமை அடைகிறது. அவரை கவுரவிக்கும் வகையில் ஹர்மன்பிரீத் கவுருக்கு டி.எஸ்.பி. பதவி அளிக்கப்படும்’’ என குறிப்பிட்டுள்ளார்.