ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
இதையடுத்து, மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பல்வேறு திட்டங்களின் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு துவக்க உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
அப்துல் கலாம் மற்றும் ஜெயலலிதா ஆகிய முக்கிய ஆளுமைகளை நாம் இழந்துவிட்டோம். இருவரும் நம்மிடையே இல்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த விழாவில் கலந்துகொண்டிருப்பார்.
கலாம் மறைந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தனது கருத்துக்கள் மூலம் இன்றளவும் நம்முடன் வாழ்கிறார். எளிமையாக வாழ்ந்து உயரத்தை அடைந்த மனிதர் கலாம்.
நாட்டு மக்களுக்கு அப்துல் கலாம் அக்னி சிறகுகளை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இந்தியாவின் அக்னியாக திகழ்ந்தவர் கலாம். அனைத்து துறைகளிலும் இந்தியா வல்லரசாகத் திகழ ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.