தீவிபத்து 
செய்திகள்

சென்னையில் பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 3 குடிசைகள் எரிந்து சேதம்

சென்னையில் பட்டாசு வெட்டிக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 3 குடிசைகள் எரிந்து சேதமாயின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை செம்பியம் மதுரைசாமி மடம் பகுதியில் தீபாவளியையொட்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது, ராக்கெட் பட்டாசின் நெருப்பு அங்குள்ள ஆனந்தன் என்பவரது குடிசை மீது விழுந்தது. இதில், அடுத்தடுத்து 3 குடிசைகள் தீப்பிடித்தன. உடனே இது குறித்து செம்பியம் தீயணைப்பு துறையினர் மற்றும் வியாசர்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரம் போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் குடிசையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. முருகன் மற்றும் சுந்தரி ஆகியோர் வீடு முற்றிலும் எரிந்து நாசமாயின. வீட்டில் இருந்த 10  சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் சாமுண்டீஸ்வரி மற்றும் திருமலை என்பவரது வீட்டில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

மூன்றாவதாக ஆட்டோ டிரைவர் தினேஷ் மற்றும் முத்துலட்சுமி என்பவரது வீட்டில் இருந்த டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. இது குறித்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.