செய்திகள்

திட்டக்குடி அருகே வெலிங்டன் ஏரிக்கரையில் விரிசல் - சீரமைப்பு பணி தீவிரம்

திட்டக்குடி அருகே வெலிங்டன் ஏரி கரையோரம் 3 அடி ஆழத்தில் 20 மீட்டர் நீளத்துக்கு திடீரென விரிசல் ஏற்பட்டதால் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.

மாலை மலர்

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்செருவாயில் வெலிங்டன் ஏரி உள்ளது. இந்த ஏரி 1660 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் மூலமாக சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்பட்டது. இதனால் ஏரியை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து ரூ.6½ கோடி மதிப்பில் ஏரியின் கரைகள் பலப்படுத்துதல், ஆழப்படுத்துதல் மற்றும் ‌ஷட்டர், மதகுகள் புனரமைப்பு பணிகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பணிகள் முடிவடைந்தன.

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. கடலூர் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெலிங்டன் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இப்போது ஏரியின் நீர்மட்டம் 16.5 அடியாக உள்ளது.

ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் ஏரியின் கரையோரம் நேற்று 3 அடி ஆழத்தில் 20 மீட்டர் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டு கரை உள்வாங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ராமகிருஷ்ணன், நிர்வாக பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏரியின் கரையில் ஏற்பட்ட விரிசலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் விரிசல் ஏற்பட்ட கரையில் ஜல்லிகற்கள் மற்றும் கிராவல் மண் கொட்டி பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். ஏரிக்கரையில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.