செய்திகள்

போலி நிறுவனங்கள் மூலம் வங்கிகளில் மாற்றப்பட்ட ரூ.6,500 கோடி கருப்பு பணமாக இருக்கலாம்: மத்திய மந்திரி

போலி நிறுவனங்கள் மூலம் வங்கிகளில் மாற்றப்பட்ட ரூ.6,500 கோடி கருப்பு பணமாக இருக்கலாம் என மத்திய விவகாரத்துறை மந்திரி பி.பி.சவுத்ரி தெரிவித்தார்.

மாலை மலர்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் போலி நிறுவனங்கள் மூலம் வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றப்பட்ட ரூ.6,500 கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய விவகாரத்துறை மந்திரி பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களின் பதிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது இந்த நிறுவனங்கள் கருப்பு பணம் டெபாசிட் செய்து மாற்றியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் இந்நிறுவனங்கள் வங்கிகளில் ரூ.6,500 கோடி டெபாசிட் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை கருப்பு பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதுபோல் கம்பெனிகள் சட்டத்தை 1,505 நிறுவனங்கள் மீறியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது. போலி நிறுவனங்களுக்கு எதிரான மத்திய அரசின் இத்தகைய தொடர் நடவடிக்கைகளால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். சிறந்த நிறுவனங்களில் அவர்கள் முதலீடு செய்ய இந்த நடவடிக்கை உதவியுள்ளது.