மேலூரில் நேற்று அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நடிகையும், தலைமைக்கழக பேச்சாளருமான சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது:-
சசிகலா தனது குடும்பத்தை மறந்து 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நிழலாக இருந்து வந்தார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியினர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதாக சொல்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்.
ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் அரசியலில் இருந்தே காணாமல் போய்விடுவார்கள். இவர்களை ஒருபோதும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சசிகலாவின் தியாகம் அளப்பரியது. அவர் நினைத்திருந்தால் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு தனது உறவினரை முதல்வர் ஆக்கியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை தான் முதல்வராக்கினார்.
சசிகலா மீதான குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானது. தியாகத்தின் மொத்த உருவம் அவர்தான். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பல பேர் கேட்கிறார்கள். இப்போது நாங்கள் கேட்கிறோம். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தினால் உண்மைகள் தெரிய வரும்.