சென்னை:
ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் அமர்நாத் யாத்திரையை முடித்து திரும்பி வந்துகொண்டிருந்தவர்களின் பேருந்தை குறி வைத்து தீவிரவாதிகள் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில வருடங்களில் நடைபெற்ற மோசமான தாக்குதல் இது ஆகும்.
இந்த கொடூர தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமர்நாத் தீவிரவாத தாக்குதலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், ”கொடூரமான அமர்நாத் தீவிரவாத தாக்குதல் வெறுக்கத்தக்க செயல் ஆகும். அப்பாவி பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவது கோழைத்தனம். இதயமற்ற தீவிரவாதிகளை ஒழித்துக் கட்ட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.