மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்த போது இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியின் ‘ஐ.என்.எக்ஸ். மீடியா’ நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத்தர சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த முரளிதர், நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கினார். இதுகுறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், கார்த்தி சிதம்பரத்தின் தந்தையான மூத்த வக்கீல் ப.சிதம்பரத்திடம், முரளிதர் ஜூனியராக வேலை செய்தார். அந்த விசுவாசத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளார்’ என்று கூறியிருந்தார்.