ப.சிதம்பரம் 
செய்திகள்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- ப.சிதம்பரத்திடம் முக்கிய ஆவணங்களை வழங்க உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு, குற்றப்பத்திரிகையுடன் இணைத்து தாக்கல் செய்யப்பட்ட சில ஆவணங்களை வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

மமத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், அன்னிய முதலீடாக ரூ.305 கோடி பெற அனுமதி வழங்கப்பட்டதில், முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.  

இந்நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையுடன் தாக்கல் செய்யப்பட்ட சில ஆவணங்களை ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

வழக்கு விசாரணைக்காக ப.சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.